Saturday 10 September 2016

செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து!

செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.
இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்






பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.
சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.
சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.
‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)
ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)
சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.
அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.
இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.
ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன

No comments:

Post a Comment