Saturday 10 September 2016

மனிதப் பிறப்பும், தமிழ் இலக்கியமும்


-----------------------------------------------------------
அறிவியல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு வகையான வளர்ச்சியை, வியத்தகு முன்னேற்றத்தை அடைந்து கொண்டே வருகிறது. மனிதனின் பிறப்பைப் பற்றி புதுப்புது கண்டுப்பிடிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த அறிவிப்புகள் எல்லாமே நமது இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர் கதையாகவும் , பாடலாகவும் கூறியவற்றைத்தான் இன்று அவர்கள் அறிவியலாக மாற்றித்தருகிறார்கள் என்பதே உண்மை.
1977-ல் தாயின் கரு முட்டையையும், தந்தையின் விந்துவையும் வெளியில் எடுத்து இணைத்து அதைச் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியதாக மேலை நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனைக் குழாய்க் குழந்தை நமது மகாபாரதத்தில் அப்போதே இடம் பெற்றுள்ளது. காந்தாரி தனது வயிற்றில் அம்மி(உலக்கை) குழவியைக் கொண்டு இடித்துக் கொள்ள, அவள் வயிற்றில் இருந்த கரு சிதைந்து வெளியேற, அதை அள்ளி எடுத்து குடுவைகளில் வார்க்க அதிலிருந்து கௌரவர்கள் பிறந்ததாகவும், மீதி சிதறிக் கிடந்ததை ஒன்றிணைத்து வைக்க அதிலிருந்து ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் பாரதக் கதை சொல்கிறது.
சிதைந்த கரு எப்படி உயிர் பெற முடியும் என்ற லாஜிக் அங்கே இடிக்கிறது.
ஆனால் தாயின் வயிற்றிலிருந்து கரு முட்டையை எடுத்து உயிரணுவுடன் இணைப்பதைத்தான் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள்.
ஆன்மிகத்தைக் கூற வந்த நம் முன்னோர் அதில் அறிவியலை குறிப்பாக மனிதப் பிறப்பையும் இறப்பையும் கூறியுற்றது வியக்கத்தக்கது.
தாயின் கரு முட்டை, தந்தையின் உயிரணு இரண்டுமே இல்லாமல் தாயின் திசுவிலிருந்தும் குழந்தை உருவாக முடியும் என்பதை இன்றை அறிவியல் கண்டுப்பிடித்து அதை `குளோனிங்' மனிதன் என்றும் கூறுகிறார்கள். இதை உலகமே எதிர்க்கிறது.
ஆனால் நமது ஆன்மிகத்தில் பார்வதி தேவி தனது உடம்பிலிருந்து சந்தனத்தை வழித்தெடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாய் கதை உள்ளது. சந்தனத்தில் எப்படி குழந்தை உண்டாகும் என பலர் கேலி பேசியிருக்கலாம். அது வெறும் சந்தனமல்ல பார்வதிதேவியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட திசுவாக நாம் கொள்ளவேண்டும்.
இராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றதாய் கதை கூறுகிறது.
பிறகுதானே இன்றைய விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுப் பிடித்தார்கள்.
நவகிரகங்களை வைத்து நம்மவர்கள் சாமியாக வணங்கிணார்கள். மேலை நாட்டினர் விண்ணில் ஒன்பது கோள்கள் உள்ளதாய் கண்டுப்பிடித்தார்கள்.
மண்ணைத் திருடித்தின்ற கண்ணனுடைய வாயில் உலகமே தெரிவதாய் கதையில் படித்தோம். இன்று தொலைக்காட்சியிலும் , கணினியிலும் உலகத்தையே காண்கிறோம்.
அர்ச்சுனனின் மகன் அபிமன்யு அவனுடைய அம்மா சுபத்திரை வயிற்றில் கருவாக இருந்தான். அப்போது பிற்காலத்தில் நிகழப்போகும் பாரதப் போர் பற்றி கண்ணன் கதையாகக் கூற, சுபத்திரை கேட்டுக்கொண்டிருக்கிறாள். சக்ராயூகத்துக்கு உள்ளே செல்லும் (வழி) வரை கேட்டுக்கொண்டிருந்த சுபத்திரை பிறகு தூங்கி விடுகிறாள்.அதன் பிறகு கண்ணன் வெளியில் வரும் வழி சொன்னதை அவள் கேட்கவில்லை. ஆகையால் அவள் வயிற்றில் இருந்த கருவும் கேட்க முடியாமல் போகிறது. பிறகு குழந்தை பிறந்து பெரியவனாகி போருக்குப் போகும் போது அபிமன்யூவிற்கு அந்த இடங்களை ஏற்கனவே கேள்விப் பட்ட ஞாபகம் வருகிறது.(அவன் தாயின் வயிற்றில் இருந்தபோது கேட்டதுதான்)
உள்ளே செல்லத் தெரிந்தவனுக்கு வெளியில் வரும் வழித்தெரியாமல் சண்டையில் இறந்து போகிறான். சுபத்திரை தன் அண்ணன் கண்ணிடம் அழுதுகொண்டே கேட்கிறாள். `நான் வழி சொன்னேன் நீதான் அப்போது தூங்கி விட்டாய்' என்கிறான் கண்ணன்.
இந்த உண்மையை இப்போது கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி உண்டு என்றும் தன் தாய் சிரித்தால் அது சிரிக்கும். அழுதால் அழும். இடிபோன்ற பெரிய சத்தம் கேட்டால் பயப்படும் என்றும் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள்.
அதனால்தான் கருவுற்றிருக்கும்போது நல்ல புத்தகங்கள், நல்ல காட்சிகளைக் காணவேண்டும் என்று கூறுகிறார்கள்.
பட்டினத்தார் தன் பாடல் ஒன்றில்,

`ஒரு மடமாதும் ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் ஈதென்று
பார்வை மெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து..'

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்பதிலிருந்து பிறக்கும் வரை கூறியிருக்கிறார்.
(சுரோணிதம்-கருமுட்டை\பண்டி-வயிறு)
திருமூலர்

`ஏயம் கலந்த இருவர் தம் சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப்பல
காயம கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே..'

என்றப் பாடலில் உயிரணுவும், கருமுட்டையும் கருப்பையில் சேரும்பொழுது ஆண், பெண் இருவரின் உடம்பிலும் கலந்துள்ள எண்ணங்களும் சேர்ந்தே குழந்தையை உண்டாக்குகிறது. உருவமில்லாத எண்ணங்களும் உணர்வுகளும் சேர்ந்துதான் குழந்தைக்குப் போகிறது என்கிறார்.
இன்று தாயின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுப்பிடிக்க °கேன் வசதி வந்து விட்டது. திருமூலர் காலத்தில ஓலைச்சுவடித் தவிர, ஓர் அறிவியல் கருவியும் இல்லை. ஆனால் அவர் எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாய்,

ஆண் மிகில் ஆண் ஆகும்
பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில்
அலியாகும்...'

என்று ஆணுக்குரிய குரோமோசோம், பெண்ணுக்குரிய குரோமோசோம் என்ற இன்றைய அறிவியல் கணக்கை வைத்து அன்றே கூறியிருக்கிறார்(விரிவாக `அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது ... அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது' பழமொழியில் காண்க)

`பாய்ந்தபின் ஐந்து ஓடில்
ஆயுளும் நூறாகும்
பாய்ந்த பின் நால் ஓடின்
பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்கும் பாய்ச்சலுமாமே...' என்கிறது திருமந்திரம்.
சுக்கிலம் எனப்படும் உயிரணுவானது ஐந்து விரற்கடை ஓடினால் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆயுள் நூறு என்றும் நான்கு விரற்கடை ஓடினால் எண்பது வயதுவரை வாழ்வர் என்றும் கூறும் திருமூலர் இது எல்லா தந்தையாலும் முடியாது ஒரு வேளை உண்டு, மனசையும் உடலையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் யோகியால் மட்டுமே முடியும் என்கிறார்.
மரபணுவின் படி அவர்களின் பெற்றோர், அல்லது அவர்கள் பரம்பரையில் யாருடைய தோற்றத்தையாவது கொண்டுதான் குழந்தைகள் பிறப்பர் என்கிறது இன்றைய அறிவியல்.

பாய்கின்ற வாயு குறையின்
குறள் ஆகும்
பாய்கின்ற வாயும் இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்கிலைப் பார்க்கிலே...'

குள்ளம், முடம், கூனல் போன்ற குறையுள்ள மனிதன் பிறப்பது அவனுடைய தந்தையின் உயிரணுவினால் தான் தீர்மானிக்கப்படுகிறதே ஒழிய தாயின் கருமுட்டையினால் அல்ல என்பது திருமூலரின் கண்டுப்பிடிப்பு.
கலவியின் போது ஆண்களுக்கு மூச்சுக்காற்று வலது மூக்கு வழியாக இயங்கினால் ஆண் குழந்தை என்றும் இடமூக்கு வழியாக இயங்கினால் பெண் குழந்தை என்றும் இட,வட மூக்கு என ஒரே நேரத்தில் இயங்கினால் குழந்தை அலியாகப் பிறக்கும் என்றும் கூறியிருக்கிறார் திருமூலர்.
நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அந்நியர்கள் நம் புராணங்களையும், இலக்கியங்களையும் எடுத்துச்சென்று ஆய்ந்ததின் விளைவுதான் இன்றைய அவர்களது கண்டுப்பிடிப்புகளாகத் தொடர்கின்றன.
புராணமெல்லாம்....வெறும் கதை.. சாமியெல்லாம் சுத்த பொய்... தமிழ்ப்படித்தால் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும்போக முடியாது என்றெல்லாம் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு இலக்கியங்களையும், இதிகாசங்களையும் ஒதுக்கியதன் விளைவு, அதில் மறைந்துள்ள அறிவியலையும் ஒதுக்கி விட்டோம் அல்லது இழந்து விட்டோம் என்பதே உண்மை

No comments:

Post a Comment